×

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை: மீறினால் 2 ஆண்டுகள் சிறை என எச்சரிக்கை

சென்னை: வருகிற 19ம் தேதி காலை 7 மணியிலிருந்து ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மக்களவைப் பொதுத்தேர்தல்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவிற்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126ஏ விதிகளின்படி, யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை கருத்துக்கணிப்பு வெளியிட தடை தொடரலாம். இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, இவற்றை கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும். இந்த விதிகளின்படி ஏப்.19ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியிலிருந்து ஜூன் 1ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) தடை செய்யப்பட வேண்டிய கால அளவு என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 48 மணி நேரம் முன் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும், யாதொரு நபருக்கும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

The post ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை: மீறினால் 2 ஆண்டுகள் சிறை என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...